search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்"

    • அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம்.

    உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது. உதாரணமாக அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியாது. அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்ற அந்த நாட்டு படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.

    அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நடந்தது. அடுத்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியாவை போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை..

    அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்க இந்த கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர். கடந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ்(58) அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உள்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் சொல்ல தொடங்கி உள்ளன.

    அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க அதிபருக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

    கமலா ஹாரிஸ், பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது முன்னோர் மன்னார்குடி அருகில் துளச்சேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே போல் விவேக் ராமசாமி பிறந்தது அமெரிக்காதான். ஆனால் அவர்களது பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழியும் தமிழ் தான். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடக்கஞ்சேரியில் வசித்தவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று அதிபர் ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

    தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

    • அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.
    • துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

    அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே, விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளனர்.

    இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் உள்ளது. அவர்களின் அடிப்படை சுதந்திரங்களுக்காக நிற்க வேண்டும். இதுவே நம்முடைய கொள்கை என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுடன் சேருங்கள். வேலையை முடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களாகிய நாம் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது ஜனநாயகம் அதற்காகப் போராடுவதற்கான நமது விருப்பத்தைப் போலவே வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஜோ பைடன் மற்றும் நானும் மறுதேர்தலில் போட்டியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 நடைபெறுகிறது.
    • டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டப்ளின் :

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர், அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன், தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
    • டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

    அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

    இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார்.

    தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், "இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்" என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×